Tuesday, September 4, 2007

கூடைக்குள் தேசம் 07

61
தேகம் மறைந்தவுடன்
தேசத்துப் புரிந்து விட்டது
தியாகத்தின் வேர்கள்.

62
அஸ்திவாரமிட்டதும்
அழுகையை நிறுத்திக்கொண்டது
கன்னியின் கர்ப்பப்பை.

63
வண்ண முடுத்து இதவாசனை பூசி
வீட்டு முற்றத்தில் விபச்சாரிகள்
பூக்கள்

64
இடம் பெயர்ந்து விட்டன
நேர்மை நியாயம் மகிழ்வு முதலானவை
புகுந்து விட்டது சந்தேகம்.

65
ஏய்! யாரங்கே ஆற்றில்
பாலைக் கொட்டிவிட்டு ஒலமிடுவது
நீர்வீழ்ச்சி

66
பாசறைப் பிரதேசத்துக்கு
உயிர் வந்து விட்டது-
சிற்பியின் வரவு.

67
சில்லறை விலையில்
சின்னச் சின்ன சவப்பெட்டிகள்
சிகரெட் பாக்கட்டுகள்.

68
வறுமை கொடுமை அடக்குமுறை
மலிந்த பூமியில் கொழுந்து விட்டது
தேயிலை.

69
தோலைச் சுவைத்து
கோலம் போட்டு வளர்ந்து
தேமல்.

70
பலரைக் குத்தி விட்டு
தண்டனையின்று தப்பிக்கொண்டான்
கவிஞன்.

71
கோடி கோடி வார்த்தைகள்
நாவுமில்லை இதழ்களுமில்லை
உன்னிரண்டு கண்கள்!

72
கடை திறக்கப்பட
முதல் பில்லில் போட்டார் வியாபாரி
நியாயமும் இரக்கமும்

73
ஜடத்துக்குக் கூட
நான்கு கால்கள்
நாற்காலி.

74
வாய்திறந்த வயிற்றுப்பசியை
உரித்த ஆடை அடைத்துவிட்டது
இனி சட்டப்பசி வாய்திறக்கும்.

75
எஞ்சிய ஒரு பிடிசோறு
பழங்கீரைக்கறியின் நெடி – பெண்ணே
உன் வாந்தியில் வறுமை மட்டுமா தெரிகிறது?

76
வெற்றியை கொணர்ந்தது
அறிவாறிகள் உயிர்த்தியாகம்
முட்டாள் ராச்சியம்.

Monday, September 3, 2007

கூடைக்குள் தேசம் 06

51.
ஆயிரத்துக்கு முயன்று நூறு
அதிகமாக கிடைத்து விட்டது.
இப்போ இலக்கு இரண்டாயிரம்.

52.
நேற்று எங்களுருக்கு
புதிய அதிகாரி வந்தார்
பழையவரைப் போலவே!

53
கத்தியெடுத்தது காற்று
தீட்டி விட்டவன் சூரியன்
இலையுதிர்காலம்.

54.
பாலில் முகம் பார்த்து
பதற்ற முறும் வானம்
பௌர்ணமியா? அமாவாசையா?

55
வீடென்று நான் சுமந்தது
சவப்பெட்டி தானோ!
நந்தையின் கடலை ஞானம்.

56
எஞ்சியிருந்த ஆற்றையும்
விழுங்கி ஆசையை தீர்த்தது கடல்
சூரிய யுத்த வேளை.

57
கருங்கற்களிலும்
புன்னகைகள்
காக்கையின் எச்சங்கள்

58
கடலில் ஓய்வெடுக்கும்
நதியைப்பார்த்து மூச்சு விடும்-
கரையில் வளைந்தோடும் ரோடு.

59
ஆழ நீர்த் தொட்டிக்குள்
அமிழ்த்தியும் விழித்திடா விழிகள்
உறங்கி விட்ட மீன்கள்!

60
மண்ணை மூடி மறைக்கும்
தேயிலைச் செடிகளின் கீழ்த்தடயங்கள்
உனது பாதச்சுவடுகள்.

Sunday, September 2, 2007

கூடைக்குள் தேசம் 05

41
எச்சரிக்கை! மலைகள் மீது
நடமாடிக் கொண்டிருக்கின்றன
எரிமலைகள்.

42
ஆலமரமும் நாணலும்
கதை கேட்டு முறைத்தது
குழந்தையின் முதுகெலும்பு

43
தேயிலைக்காட்டு துயர் மூச்சில்
சரிந்தன மனிதங்கள்
நின்றன மரங்கள்.

44
ஒருடல் தான்-
இலட்சியம் இரண்டாக்கியது
பாதைகள்

45
புதியவன் அழுவாமையால்
பழையவர்கள் அழுகின்றார்கள்
இந்தசிசு – பிரசவவிடுதி.

46
வடிந்த இரத்தம் தான்
எத்துணை சுவை பூனைக்கு
நாக்கில் காயம்.

47
தேடத்தொடங்க திறந்தவன்
காணாமலே போய்விட்டான்
அருமையான புத்தகம்.

48
பிணங்கள் இன்னும்
அழுகவில்லை
பனிச்சிகரத்தில் யுத்தம்.

49
ஏழையின் எத்தனைக்
கனவுகள் கலைந்தன
மூட்டைப்பூச்சிகள்.

50
நிலவுக்காக அழுவதை
நிறுத்திக்கொண்டது லயக்குழந்தை
ரொட்டி முன்னே.